Thursday, May 5, 2011

Gandhiji and Nethaji

MGR has written an account about Gandhiji and Nethaji Subash Chandra Bose in his Biography “Nan En Piranthen”. In this chapter MGR goes into details the feeling towards Gandhiji and Nethaji and also mentions the reason why he left the Congress party.

Below article was forwarded K.P.Ramesh from Dubai.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பேச்சுக்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன. என் உள்ளத்தில் அவரை ஒரு ஆதர்ச புருஷராக ஏற்றுக் கொண்டிருந்தேன். நிமிர்ந்த அவருடைய முகம், கம்பீரமான பார்வை, சின்னஞ் சிறு கைக் குழந்தையின் முகத்தில் எப்படிக் களங்கமே காண முடியாதோ, அதுபோல் தெளிவான, பசுமையான, சுய நலத்தின் வரிக்கோடுகள் எதுவும் இல்லாத தெளிந்த முகம்...
 
இப்படிப்பட்ட அவருடைய படத்தைப் பார்க்கும் போதெல்லாம், சுவாமி விவேகானந்தரின் உருவம்தான் என் நினைவுக்கு வரும். அப்படிப் பட்டவர், பட்டாபி சீதாராமை எதிர்த்து, அகில இந்திய காங்கிரசின் தலைவர் பதவிக்குப் போட்டி இட்டார்.
 
வெற்றி நேதாஜிக்குத்தான்! ஆனால், முடிவு அறிவிக்கப்பட்டவுடன், காந்திஜி, "பட்டாபி தோல்வி, என் தோல்வி...' என்று சொன்னார்; காங்கிரஸ் கட்சியே அதிர்ந்தது. அரசியலைப் பற்றி எதுவும் சரியாகப் புரியாத எனக்குக் கூடக் கலக்கம்.
 
"அப்படியானால், நேதாஜி, காந்திஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இல்லையா?' என்ற கேள்வியால் ஏற்பட்டதல்ல அக்கலக்கம்.
 
காந்திஜியின் மனதில் கூட தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற எண்ணத்திற்கு இடமிருக்கிறதா!
 
காந்திஜியைப் பற்றி விமர்சனம் செய்ய எனக்கு சிறிதும் அருகதை இல்லை என்பதை உண்மையாக இப்போதும் உணர்ந்தவனே ஆனாலும், அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையில் ஒரு சிறு விரிசல், எப்படியோ என், உலகம் அறியாத உள்ளத்தில் ஏற்பட்டு விட்டது.
 
திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக் கொண்டேன்... "காந்திஜிக்கு கூட இப்படித் தோன்ற இயலுமா?' என்று. ஆனால், "விருப்பு வெறுப்புகளைப் பாராது, வேண்டியவர், வேண்டாதவன் என்பதைப் பற்றி கவலைப்படாது, தன் தூய லட்சியத்திற்கு சேவை செய்கிறவர்கள் யார் என்பதைத் தெரியப்படுத்தாவிட்டால், தன்னைப் பின்பற்றுகிறவர்கள் தவறான பாதையில் அழைத்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டு விடுமானால், தன் லட்சியமே தவறான பாதைக்கு இழுக்கப்பட்டு விடுமானால், அதை எப்படி அந்தப் புனித உள்ளம் அனுமதிக்கும்; ஏற்கும்?' என்று இன்னொரு மனம் சொல்லிற்று.
 
இதையும் என் உள்ளம் எனக்கு அறிவுறுத்தாமலில்லை. இருப்பினும், ஏதோ ஒரு பெரிய ஏமாற்றம். அதிலும், மகாத்மாவை வணங்கிப் பதவியேற்றுப் பேசிய நேதாஜியின் பேச்சு, எனக்கு மேலும் நேதாஜியின் மேல் அனுதாபத்தையே ஏற்படுத்தியது.
 
அவர் பதவியிலிருந்து விலகியது என்னை மீளாத் துன்பத்துக்குள்ளாக்கியது என்றால் பொருத்தமுடையதே ஆகும்.
 
நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கு இது மட்டும்தான் காரணம் என்றில்லாவிட்டாலும், இதுவும் ஒரு காரணம் என்று சொல்வதில் தவறில்லை.
 
— "நான் ஏன் பிறந்தேன்' கட்டுரைத் தொடரில், எம்.ஜி.ஆர்.,
 
You will also feel how MGR converse with us, how he answers to our question in the next line. MGR was a great writer, hope that his Biography his released soon.